உள்ளூர் செய்திகள்

மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி. 

பி.ஏ.பி., வாய்க்காலில் மூழ்கிய கல்லூரி மாணவரை 3-வது நாளாக தேடும் பணி தீவிரம்

Published On 2023-02-21 07:36 GMT   |   Update On 2023-02-21 07:36 GMT
  • பொங்கலூர் ஆண்டிபாளையம் பி.ஏ.பி., வாய்க்காலில் சஞ்சய் குளித்து கொண்டிருந்தார்.
  • தொடர்ந்து வாய்க்கால் முழுவதும் தேடுதல் பணி நடைபெற்று வந்தது.

பல்லடம் :

திருப்பூர் நல்லூரை சேர்ந்த சங்கீதா என்பவரது மகன் சஞ்சய் (வயது 20). இவர் திருப்பூரில் உள்ள சிக்கண்ணா கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் நண்பர்கள் 5 பேருடன் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஆண்டிபாளையம் பி.ஏ.பி., வாய்க்காலில் சஞ்சய் குளித்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென சஞ்சயை தண்ணீர் இழுத்துச் சென்றது. உடன் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இது குறித்து அவரது தாய் மற்றும் அவினாசி பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் வந்து வாய்க்கால் முழுவதும் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இரவு நேரம் என்பதால் தேடும் பணி தடைப்பட்டது. இந்த நிலையில் நேற்று போலீசார் காங்கேயம்,வெள்ளகோயில் ஆகிய பகுதிகளிலும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் சஞ்சய் உறவினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தேடுதல் பணியை தீவிர படுத்த வேண்டும் என்று கோரி திருப்பூர்- தாராபுரம் சாலை ஆண்டிபாளையம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அவினாசிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவரது தாய், தனது மகனை உடனடியாக கண்டுபிடித்து தருமாறு அழுதபடி கூறினார். அவரை சமாதானம் செய்த போலீசார் நிச்சயம் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆகவே சாலை மறியலை கைவிடும்படியும் கேட்டுக் கொண்டனர்.

சமாதானம் அடைந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து வாய்க்கால் முழுவதும் தேடுதல் பணி நடைபெற்று வந்தது. ஆனால் மாணவனின் உடல் கிடைக்கவில்லை. தொடர்ந்து நேற்று இரவு 10 மணி வரை தேடி வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் அடர்ந்த இருட்டு காரணமாக உடலை தேடுவதை இரவு நிறுத்தினர். மீண்டும் இன்று காலை 10 மணி முதல் தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News