தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைகளுக்கு சீல்
- 45 கிலோ பிளாஸ்டிக் பைகள் பதுக்கி இருந்தது தெரியவந்தது.
- வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தினர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கூடலூர் நகரில் தாசில்தார் சித்தராஜ் தலைமையில் வருவாய்த்துறையினர் நேற்று திடீரென வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தினர். அப்போது மெயின் ரோட்டில் உள்ள ஒரு மளிகை கடையில் 45 கிலோ பிளாஸ்டிக் பைகள் பதுக்கி இருந்தது தெரியவந்தது. பின்னர் அதை பறிமுதல் செய்து, கடைகளுக்கு சீல் வைத்தனர். இதுகுறித்து வருவாய்த் துறையினர் கூறும்போது, பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பைகளுக்கு அபராத தொகை வசூலிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். தடை செய்யப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைமீதும், அதன் உரிமையாளர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.