வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு 2,122 ஏக்கர் நிலம் பட்டா- அமைச்சர் சேகர்பாபு
- கோவிலுக்கு சொந்தமான 2122.10 ஏக்கர் நிலங்களுக்கு கோவில் பெயரிலேயே பட்டா பெறப்பட்டு உள்ளது.
- வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலுக்குச் சொந்தமான இதர நிலங்களுக்கும் கோவில் பெயரிலேயே பட்டா பெறுவதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை:
அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்து சமய அறநிலையத்துறையின் நீண்ட கால சட்டப்பேராட்டங்களுக்கு பின்னர் வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அகஸ்தியம் பள்ளி கிராமத்தை சேர்ந்த 2,122.10 ஏக்கர் நிலம் தொடர்பாக கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கப்பெற்று உள்ளது.
இத்தீர்ப்பின் அடிப்படையில் இந்த நிலங்களுக்கு பட்டா பெற நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் கோவில் செயல் அலுவலரால் விண்ணப்பிக்கப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு கோவிலுக்கு சொந்தமான 2122.10 ஏக்கர் நிலங்களுக்கு கோவில் பெயரிலேயே பட்டா பெறப்பட்டு உள்ளது.
மேலும், வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலுக்குச் சொந்தமான இதர நிலங்களுக்கும் கோவில் பெயரிலேயே பட்டா பெறுவதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒட்டுமொத்தமாக, கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் எங்கிருந்தாலும் அவற்றை கண்டறிந்து கோவிலுக்கு ஒப்படைக்கும் பணிகளில் அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் உறுதுணையாய் செயலாற்றும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.