உள்ளூர் செய்திகள்
திருவாலங்காடு நீர் தேக்கியை வந்தடைந்த மேட்டூர் காவிரி நீர்
திருவாலங்காடு நீர் தேக்கிக்கு மேட்டூர் காவிரி நீர் வந்தடைந்தது.
குத்தாலம்:
மேட்டூர் அணை கடந்த 24ம் தேதி பாசனத்துக்காக திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் இரவு கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆறுகளின் தலைப்பு பகுதியில் உள்ள நீர் தேக்கியில் தண்ணீர் வந்தடைந்தது. காவிரியில் முதல் கட்டமாக 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதற்காக நீர் தேக்கியில், தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதையடுத்து இன்று காலை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கண்ணப்பன், உதவி பொறியாளர் யோகேஷ் மற்றும் விவசாயிகள் காவிரி நீருக்கு மலர்தூவி வரவேற்பளித்தனர்.
மேட்டூர் அணையின் விதிகளின் படி, காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகாருக்கு முன்னதாக, மேலையூர் கடையணை பகுதிக்கு காவிரி நீர் சென்று சேர்ந்த பின்னர், மற்ற கிளை ஆறுகள், வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படும். இதன் படி இன்னும் ஓரிரு தினங்களில், தண்ணீர் பாசனத்திற்காக பகிர்ந்து அளிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு முன்கூட்டியே மே 24 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்போது கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேர்ந்துள்ளதால் மகிழ்ச்சியளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். காவிரி மற்றும் கிளை ஆறுகள் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.