உள்ளூர் செய்திகள்
தற்கொலை

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

Published On 2022-06-01 04:18 GMT   |   Update On 2022-06-01 04:18 GMT
கோவையில் தம்பிக்கு வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பிவிட்டு காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கோவை:

கோவை கோவில்பாளையம் அருகே உள்ள அத்திப்பாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி கீதா (வயது 37).

இவர்கள் கடந்த 17 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சக்திவேல்(16), ஹரீஷ்(10) என 2 மகன்கள் உள்ளனர். கடந்த 25-ந் தேதி கீதா தனது குடும்பத்துடன் பெற்றோர் வசித்து வரும் குன்னூர் இந்திரா நகரில் நடந்த கருமாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு சென்றார்.

பின்னர் தனது மூத்த மகன் சக்திவேலுவுக்கு 10-ம் வகுப்பு பொது தேர்வில் கடைசி தேர்வு என்பதால் 30-ந் தேதி வீட்டிற்கு வந்தார். மகன் தேர்வு எழுதி விட்டு வந்த உடன் மீண்டும் குன்னூருக்கு புறப்பட்டு சென்றார். திருவிழா நடந்து கொண்டு இருந்த நிலையில் கீதாவின் கணவர் வேலுசாமி ஊருக்கு செல்லலாம் என கூறினார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வேலுசாமி தனது மனைவியை தாக்கினார். பின்னர் அவரை வலுக்கட்டாயமாக ஊருக்கு அழைத்து வந்தார்.

இதனால் கீதா மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த அவர் தற்கொலை செய்வது என முடிவு செய்தார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் தனது தம்பி தினேஷ் என்பவருக்கு தனது மகன்களை நன்றாக பார்த்து கொள்ளவும் என வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பி விட்டு வீட்டில் உள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மறுநாள் குளியல் அறைக்கு சென்ற வேலுசாமி தனது மனைவி தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News