உள்ளூர் செய்திகள்
எலிமருந்து தின்று இளம்பெண் தற்கொலை
குரும்பாபேட்டில் எலி மருந்து தின்று இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை குரும்பாபேட் 8-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மனோகர். இவரது மனைவி சுமதி (வயது 29). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக சுமதி உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். டாக்டரிடம் காண்பித்தும் நோய் குணமாகவில்லை.
இந்த நிலையில் சம்பவத்தன்று நோய் கொடுமை அதிகமானதால் மனமுடைந்த சுமதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த எலிமருந்தை தின்று விட்டார்.
இதனை அவர் தனது கணவரிடம் கூறவில்லை. மறுநாள் காலையில் சுமதி மயங்கி கிடப்பதை கண்டு அவரது கணவர் மனோகர் விசாரித்தார். அப்போது எலிமருந்து தின்று தற்கொலைக்கு முயன்றதை தெரிவித்தார்.
உடனே சுமதியை சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும், அதன் பின்னர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியிலும் சுமதி அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுமதி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது உறவினர் தயாளன் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.