உள்ளூர் செய்திகள்
விஷம்

நெல்லையில் இன்று கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த விவசாயி

Published On 2022-05-30 10:26 GMT   |   Update On 2022-05-30 10:26 GMT
ராதாபுரம் அருகே உள்ள வேப்பளங்குளத்தை சேர்ந்த விவசாயி இன்று நெல்லையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக வந்தார்.
நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

இதையொட்டி அலுவலக வாயில்களில் போலீசார், தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த விவசாயியால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்த விபரம் வருமாறு:-

ராதாபுரம் அருகே உள்ள வேப்பளங்குளத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 50). விவசாயி.

இவர் இன்று நெல்லையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக வந்தார்.

பிரதான வாயில் வழியாக செல்லாமல் மற்றொரு பாதை வழியாக கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்ற அவர் திடீரென கையில் மறைத்து வைத்திருந்த விஷபாட்டிலை எடுத்து குடித்தார்.

இதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் ஓடி சென்று பாட்டிலை தட்டிவிட்டனர். பின்னர் அவரை ஆம்புலன்சில் ஏற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சம்பவ இடத்தில் அய்யப்பன் கொண்டு வந்திருந்த மனு ஒன்று இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனக்கு சொந்தமான 2 ஏக்கர் இடம் வள்ளியூர் பகுதியில் உள்ளது. அந்த இடத்தை 2 பேர் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் அந்த இடத்திற்கு செல்ல முடியாதபடி புது வழிப்பாதை அமைத்துள்ளனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட எனது இடத்தை மீட்டு தருமாறு கிராம அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் புகார் செய்தேன். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் வள்ளியூர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தேன். அங்கு எனது மனுவை பெற்றுக்கொண்டு ரசீது மட்டும் வழங்கினர்.

மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

மேலும் அந்த மனுவில் அவர் தனது மகனுக்கு சிலவற்றை கூறி உள்ளார். அதில், அரசு நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுக்கொடுத்தால் அதனை விற்று கிடைக்கும் பணத்தில் கடனை அடைத்து விடு.

மேலும் ரூ.2 லட்சத்தை இலங்கையில் வாடும் மக்களுக்கு அனுப்புவதற்காக முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்ப வேண்டும். மீதி பணத்தை வங்கியில் உனது பெயரில் டெபாசிட் செய்துகொள் என அந்த மனுவில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News