உள்ளூர் செய்திகள்
இணையதள சேவை முடக்கம் எம்.எல்.ஏ., புகார்
100 நாள் வேலை திட்டத்திற்கு வரும் கிராம மக்களை இணையதள சேவை முடங்கி உள்ளதாக கூறி திருப்பி அனுப்புகின்றனர் சிவகங்கை எம்.எல்.ஏ.புகார் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் சிவகங்கை சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்நாதன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அது குறித்த நடவடிக்கை எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்.
அதன் ஒரு பகுதியாக சாத்தரசன்கோட்டை அருகே உள்ள குருந்தங்குளம், மருதங்குடி ஆகிய பகுதிகளில் கிராம மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த ஒரு ஆண்டாக சிவகங்கை தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ. என்பதாலேயே ஆளுங்கட்சியால் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. ஒரு நல திட்டங்கள் கூட வழங்கப்படவில்லை.
சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சிவகங்கை தொகுதிக்கு சட்டக்கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கையை வைத்த போது அந்த கல்லூரியை ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக்சிதம்பரம் கோரிக்கை வைத்ததால் காரைக்குடி தொகுதிக்கு அறிவிக்கிறோம் என்று அறிவித்துள்ளனர்.
மேலும் கடந்த ஓரு ஆண்டுகளில் முறையாக சாலை வசதிகளோ, விவசாயத்திற்கு தேவையான மும்முனை மின்சாரமோ முறையாக வழங்கப்படவில்லை. 100 நாள் வேலை திட்டத்திற்கு வரும் கிராம மக்களை இணையதள சேவை முடங்கியுள்ளதாக கூறி வேலை தராமல் திரும்பி அனுப்பி வருகின்றனர்.
இது குறித்த கோரிக்கைகளே அதிகளவில் பொதுமக்கள் என்னிடம் தெரிவித்தனர்.மேலும் சிவகங்கை தொகுதி இதுபோல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால் தொகுதி மக்களை திரட்டி பெரிய அளவில் அரசுக்கு எதிரான போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.