உள்ளூர் செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் மன்மதன் உருவ பொம்மை எரிக்கப்பட்ட போது எடுத்த படம்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மன்மத தகனம் நடைபெற்றது

Published On 2022-05-15 09:10 GMT   |   Update On 2022-05-15 09:10 GMT
சித்திரை வசந்த உற்சவம் நிறைவையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மன்மத தகனம் நிகழ்ச்சி நடந்தது
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நிறைவையொட்டி அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

சித்திரை வசந்த உற்சவம்தி ருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா, மகா சிவராத்திரி விழா போன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். சித்திரை மாதத்தில் இக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நடைபெறும். இந்த உற்சவ விழா 10 நாட்கள் நடைபெறும்.

இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவ விழாவானது கடந்த 5-ந் தேதி தொடங்கியது. முன்னதாக 4-ந் தேதியன்று மாலையில் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியின் முன்பு பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து விழா நாட்களில் கோவிலில் கடந்த 5-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை இரவு மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோவிலில் மகிழமரம் அருகில் சாமிக்கு பொம்மை வடிவிலான சேடி பெண் பூப் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தீர்த்தவாரி நிகழ்ச்சி தொடர்ந்து நேற்று சித்திரை வசந்த உற்சவம் நிறைவு விழாவையொட்டி பகல் சுமார் 12.30 மணியளவில் திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. 

முன்னதாக உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்திலும் தனித் தனி வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றியுள்ள மாட வீதியை வலம் வந்தனர். பின்னர் அய்யங்குளத்திற்கு மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். அய்யங்குளத்தில் உள்ள மண்டபத்தில் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் அய்யங்குளத்தில் சூல ரூபத்திற்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மன்மத தகனம் பின்னர் அய்யங்குளத்திற்கு எதிரில் உள்ள அருணகிரிநாதர் கோவிலில் சாமிக்கும், பராசக்தி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து தொடர்ந்து நேற்று இரவு கோபால விநாயகர் கோவிலில் சாமிக்கு மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் இரவு 10 மணியளவில் கோவில் கொடிமரம் அருகில் மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் மன்மத உருவபொம்மை செய்து வைக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் எழுந்தருளி மன்மதன் மீது பாணம் தொடுக்கும் நிகழ்ச்சியில் மன்மத உருவபொம்மை எரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News