உள்ளூர் செய்திகள்
கோவையில் 13 மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் மறுசீரமைப்பு
ஆனைமலை, பொள்ளாச்சி, சுண்டம்பாளையம், கெம்பநாயக்கன் பாளையம் என 8 பள்ளிகளில் ஆய்வு நடந்தன.
கோவை:
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்கள் மறுசீரமைக்கப்படுகிறது. பள்ளிகளின் அடிப்படையான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும், வளர்ச்சி பணிகளுக்காகவும் இக்குழு செயல்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் மேலாண்மை குழுக்களை மறு கட்டமைப்பு செய்வதற்கான பணியினை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து இன்று முதல்கட்டமாக நடுநிலைப் பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்படுகின்றன. கோவையில் 13 மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் மேலாண்மைகுழுக்கள் இன்று மறு சீரமைப்பு செய்யப்படுகிறது.
இல்லம் தேடி கல்வி இக்குழுக்களுக்கு 20 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 15 பெற்றோர். ஒரு மாற்றுத்திறனாளி மாணவரின் பெற்றோர், அந்த பகுதிக்கு உட்பட்ட 2 கவுன்சிலர்கள், தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர்.புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதால் மாநகராட்சி பள்ளிகள் களைகட்டின.
உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளிலும் புதிய குழுக்கள் அமைக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதிய மேலாண்மை குழுக்கள் 2 ஆண்டுகள் செயல்படும் என்றனர்.
இதேபோன்று கோவை மாவட்ட பள்ளிகளில் இயக்குனர், இணை இயக்குனர்கள் அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, மாவட்ட அதிகாரிகளை தவிர்த்து, பள்ளிகளை தாமாக தேர்வு செய்து அதிகாரிகள் திடீர் என வந்தனர்.
கோவைக்கு வந்த அதிகாரிகள் குழுவில், இயக்குனர் அறிவொளி, இணை இயக்குனர்கள் நரேஷ், ராஜேந்திரன் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். ஆய்வின் போது, ஒரு வகுப்பறையில் அமர்ந்து, ஆசிரியர்களை பாடம் நடத்த கூறினர். 40 நிமிடமும் முழுமையாக அமர்ந்து கற்பித்தல், கற்றல் சூழல் களை பார்வையிட்டதுடன், மாணவர்களுக்கு ஓ.எம். ஆர். தாள்கள் வழங்கி, ஆன்லைன் வாயிலாக பிரத்யேக செயலி மூலம்அனுப்பிய 6 கேள்விகளுக்கு, பதில் அளிக்க அவகாசம் அளித்தனர்.
மாணவர்களுடன் நேரடியாக பேசி அவர்களின் வாசித்தல், எழுதும். திறனை கண்காணித்தனர். மாணவர்களின் கற்றல் அடைவு, ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் சார்ந்தே, அதிகளவில் ஆய்வில் கண்காணிக்கப்பட்டது.
கோவையில் ஆனைமலை, பொள்ளாச்சி, சுண்டம்பாளையம், கெம்பநாயக்கன் பாளையம் என 8 பள்ளிகளில் ஆய்வு நடந்தன. கோவை மண்டல அளவில் கோவை, திருப்பூர்,நீலகிரி, ஈரோடு, கரூர், உள்ளிட்ட மாவட்டங்களில், நேற்று நடந்த ஆய்வுகளின் நிறை குறைகளை, அதிகாரிகள் இன்று நடக்கும் காலை அமர்வில் ஆலோசனை மேற்கொண்டனர்.