உள்ளூர் செய்திகள்
சேலத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் கைதான 2 ரவுடிகள் மீது குண்டர் சட்டம்
சேலத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் கைதான 2 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சேலம்:
சேலம் பள்ளப்பட்டி சேர்ந்த பிரபாகரன் என்பவர் கடந்த 1-ந் தேதி தனது இருசக்கர வாகனத்தில் கிச்சிபாளையம் காந்திநகர் சுடுகாடு எதிரே உள்ள மேன்சன் அருகில் வந்தார்.
அப்போது கிச்சிப்பாளையம் கோவிந்தசாமி நகரை சேர்ந்த ரவுடி மோகன்ராஜ் (எ) சுருட்டையன் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் அங்கு வந்து பிரபாகரனை தாக்கி அவரிடம் இருந்த இரு சக்கர வாகனத்தையும் செல்போனையும் பறித்துச் சென்றனர்.
மேலும் 2ந் தேதி லைன் மேடு சேர்ந்த தாதாஹயாத் என்பவர் கருவாட்டு பாலம் அருகில் சென்றபோது மோகன்ராஜ் அவரை கத்தியை காட்டி மிரட்டி மற்றும் கொலை மிரட்டல் விடுத்து அவரிடம் இருந்து ரூ. 750 பறித்துக் கொண்டார்.
இதுகுறித்து கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மோகன்ராஜ் கைது செய்யப்பட்டார்.
சேலம் மிட்டா புதூர் பகுதியைச் சேர்ந்த குமரன்.
இவருக்கும் அழகாபுரம் பெரிய பதூர் அருண் நகரை சேர்ந்த பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதனால் அந்த பெண்ணின் கணவரை இரும்பு ராடால் சரமாரியாக தாக்கியும் அரிவாள் மனையால் கழுத்தை அறுத்தும் கொன்று சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசினார். இது தொடர்பாக குமரன் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே மோகன்ராஜ் என்ற சுருட்டையன், குமரன் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர்கள் மோகன்ராஜ் மற்றும் மாடசாமி ஆகியோர் பரிந்துரை செய்தனர்.
அதன்பேரில் சேலம் மாநகர போலீஸ் கமிசனர் நஜ்மல் ஹோடா நடவடிக்கை எடுத்து மோகன்ராஜ் என்ற சுருட்டையன், குமரன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.