உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை பார்வையிட்ட போலீசார்.

ரெயிலில் கடத்தப்பட்ட 8 கிலோ கஞ்சா சிக்கியது- மர்ம நபரை பிடிக்க வேட்டை

Published On 2022-04-23 09:36 GMT   |   Update On 2022-04-23 09:36 GMT
சேலம் ரெயிலில் கடத்தப்பட்ட 8 கிலோ கஞ்சா சிக்கியது. மர்ம நபரை பிடிக்க தனிப்படை அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

ஆந்திர மாநிலத்தில் இருந்து ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுப்பதற்காக ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தனிப்படை அமைத்து  சோதனை நடத்தி வருகின்றனர். 

சோதனையின்போது தினமும் கஞ்சா பிடிபடுவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் சேலம் ரெயில்வே போலீசார் ராமன், கண்ணன், சக்திவேல், சதீஷ்குமார், சென்ன கேசவன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் இன்று அதிகாலை ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் தன்பாத்  ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில்(13351) சோதனை நடத்தினர்.

இந்த சோதனையானது திருப்பத்தூர் ரயில் நிலையம் முதல் சாமல்பட்டி ரயில் நிலையம் வரை நடத்தப்பட்டது. அப்போது எஸ்6, எஸ்7 ஆகிய ரெயில் பெட்டிகளை இணைக்கும் பகுதியில்  கேட்பாரற்று கருப்பு கலர் பேக் ஒன்று கிடந்தது. அந்த பேக்கை கைப்பற்றி போலீசார் சோதனை செய்ததில் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது, மேலும் அந்த ரெயில் பெட்டிகளில் பயணம் செய்த சக பயணிகளிடம் விசாரணை செய்ததில் கஞ்சாவை கடத்தி வந்தது யார் என்பது தெரியவில்லை.

இதனையடுத்து போலீசார் 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா கடத்திய மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News