உள்ளூர் செய்திகள்
.

சுய உதவிக்குழு தலைவியிடம் ரூ.1.20 லட்சம் திருட்டு

Published On 2022-04-23 14:58 IST   |   Update On 2022-04-23 14:58:00 IST
தி.மு.க. கவுன்சிலருடன் வந்த சுய உதவிக்குழு தலைவியிடம் ரூ.1.20 லட்சம் திருட்டு போனது.
ஆத்தூர்:

ஆத்தூர் கடைவீதி சாத்தனார் தெருவில் வசித்து வருபவர் சேகர் (வயது 53), நகை பட்டறை உரிமையாளர். இவருடைய மனைவி மங்கையர்க்கரசி (48). இவர் மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக உள்ளார்.  அதே குழுவில் ஆத்தூர் 14-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் செல்வி என்பவர் பிரதிநிதியாக உள்ளார். 

இவர்களும் அதே பகுதியை சேர்ந்த துணிக்கடை உரிமையாளரான ஹசீனா என்பவரும் நேற்று ஆத்தூர் காமராஜர் ரோட்டில் உள்ள வங்கியில் இருந்து மகளிர் சுய உதவிக்குழு கடன் தொகை ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை பெற்றனர். 

பின்னர் அதை ஒரு பையில் எடுத்து கொண்டு பணத்தை வேறொரு பைக்கு மாற்றினர்.  இதை கவனித்த மர்ம நபர்கள்  மங்கையர்க்கரசியின் முதுகில் ரசாயன பவுடரை தூவி மங்கையர்க்கரசியின் கவனத்தை திசை திருப்பிய மர்ம நபர்கள் திடீரென அவர்களிடம் இருந்த பணப்பையை பறித்து சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த 3 பேரும் ஆத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் நூதனமுறையில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Similar News