உள்ளூர் செய்திகள்
வேளாண்மைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊராட்சிக்குழு தலைவர், உறுப்பினர்கள்
பெத்தநாயக்கன்பாளையத்தில் வேளாண்மைத்துறை அலுவலகத்தை ஊராட்சிக்குழு தலைவர், உறுப்பினர்கள் முற்றுகையிட்டனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மை துறை அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த அலுவலகத்தின் மூலமாக விவசாயிகளுக்கு பல்வேறு அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்த எந்த தகவலும் விவசாயிகளுக்கும் ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு என்று யாருக்கும் தெரிவிப்பதில்லையாம்.
ரகசியமாக திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் புகார் தெரிவித்து வேளாண்மை துறை அலுவலகத்தை ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர்கள் முற்றுகையிட்டனர்.
இதுதொடர்பாக ஒன்றிய குழு தலைவர் சின்னத்தம்பி கூறுகையில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் எந்த ஒரு அரசு நலத்திட்ட உதவிகளும் நேரடியாக வழங்கப்படுவதில்லை. இடைத்தரகர் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் ரகசியமாகவே இந்த நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்றார்.