உள்ளூர் செய்திகள்
மீஞ்சூர் ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

கட்டிட அனுமதி தொகையை உடனடியாக வழங்க வேண்டும்- மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்

Published On 2022-04-23 12:59 IST   |   Update On 2022-04-23 12:59:00 IST
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பெயர் பலகையை வைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பொன்னேரி:

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்றங்களின் தலைவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் அதன் செயல் தலைவர் நிலவழகன் தலைமையில் நடைபெற்றது.

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் ஆகியோரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மேற்கொள்ளப்படும் சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் கலந்து ஆலோசித்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

தனிநபர் கட்டிடங்கள் கட்டுவதற்காக ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் அனுமதி பெறுவதற்கு செலுத்தப்படும் கட்டணத் தொகையை ஓ. எஸ்.ஆர். என்ற புதிய வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டு அந்தத் தொகை சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற நிர்வாகங்களுக்கு வழங்கப்படாததால் நிதி பற்றாக்குறையால் மக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் அடிப்படை வசதிகள் தடைபடுகிறது.

எனவே நிலுவையில் உள்ள கட்டிட அனுமதி தொகையை உடனடியாக ஒன்றிய நிர்வாகம் வழங்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பெயர் பலகையை வைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் சங்கத்தின் செயலாளர் பாலன் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News