உள்ளூர் செய்திகள்
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆலோசனை

Published On 2022-04-22 17:26 IST   |   Update On 2022-04-22 17:26:00 IST
கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளது. வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் கொடைக்கானலுக்கு வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து கொடைக்கானலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்தை சீர் படுத்துவதற்குரிய ஆலோசனைக் கூட்டம் கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு கொடைக்கானல் கோட்டாட்சியர் முருகேசன் தலைமை தாங்கினார். ஆணையாளர் நாராயணன், கொடைக்கானல் நகர்மன்றத் தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், டி.எஸ்.பி. சீனிவாசன், போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து கொடைக்கானல் கோட்டாட்சியர் முருகேசன் கூறியதாவது. கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள டோல்கேட் மையத்தில் இரு பகுதிகளில் வசூல் மையம் அமைத்து போக்குவரத்தை சீர் படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கொடைக்கானல் ஏரிப்பகுதி,நகர்ப்பகுதி, சுற்றுலா வழித்தடங்கள் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலை வரும் மே 1 ஆம் தேதி முதல் ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படும். முக்கிய சாலைகளில் நிறுத்தப்படும் சுற்றுலா பஸ்கள் மாற்று இடங்களில் நிறுத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்.

கொடைக்கானல் பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஏரிச்சாலைப் பகுதியில் சைக்கிள் கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் மாற்று இடங்களில் அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை நகராட்சி மேற்கொள்ளும் இவ்வாறு அவர் கூறினார்.

Similar News