உள்ளூர் செய்திகள்
மாற்றுத்திறனாளி தம்பதி அண்ணாதுரை- கவுரியிடம் வீடு கட்டுவதற்கான ஆணையினை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கின

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது - கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

Published On 2022-04-22 15:50 IST   |   Update On 2022-04-22 15:50:00 IST
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாக தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம், அசூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் கட்டுமான பணியினையும், கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம், ஏராகரம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

தொடர்ந்து கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் ஏராகரம் ஊராட்சியில்
 அறிவு- தமிழ் உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளின் கல்வி தரத்தினையும், கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் ஏராகரம்  ஊராட்சியில் செயல்படும் கிராம கூட்டுறவு அங்காடியில் பொது மக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் தரத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் திருவிடைமருதூர் ஒன்றியம், திருவிசைநல்லூர் ஊராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவ-தற்கான ஆணையினை  மாற்றுத்திறனாளி தம்பதி அண்ணாதுரை - கவுரியிடம் வழங்கினார். அப்போது அவர் கூறும்போது:

மாற்றுதிறனாளி தம்பதி-யான அண்ணாதுரை - கவுரியிடம் வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டு உள்ளது. கணவன்- மனைவி இருவராலும் எழுந்து நடக்க முடியாத நிலை உள்ளது. 

இவர்கள் தற்போது வசிக்கும் வீட்டின் அருகே குளம் உள்ளது. இவர்கள் கீற்று முடைந்து அவற்றை நனைய வைப்பதற்கு குளம் வசதியாக உள்ளது. இதனால் இவர்களுக்கு வீடு கட்டி கொடுத்தாலும் அந்த வீட்டின் அருகே குளம் இருந்தால் வசதியாக இருக்கும் என முடிவு செய்தோம். 

அதன்படி தற்போது பட்டா வழங்கப்பட்டு வீடு கட்ட உள்ள இடத்தின் அருகேயும் குளம் உள்ளது. இவர்களது தொழிலுக்கு அந்த குளம் பயன்படும். 

மேலும் இவர்களுக்கு கலெக்டரின் தன் விருப்ப நிதியில் இருந்து ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு விரைவில் வீடு கட்டி கொடுக்கப்படும். இவர்களை போல் மாற்று திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்து வருகிறோம். 

மாற்று திறனாளிகள் யாருக்காவது உதவிகள் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

 பின்னர் கும்பகோணம் ஒன்றியம் கொரநாட்டு கருப்பூர் ஊராட்சியில் வேளா-ண்மை மற்றும் உழவர் நலத்-துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மானியத்துடன் கூடிய நுண்ணூட்ட உரம் ஜிப்சம் 200 கிலோ மற்றும் ஜிங்க் சல்பேட் 10 கிலோவினை விவசாயிகளுக்கு  வழங்கினார்.

இந்த ஆய்வின் போது கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் லதா, வட்டாட்சியர் தங்கபிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News