உள்ளூர் செய்திகள்
கரடிகள் நாசம் செய்துள்ள வாழை

வாழைகளை தொடர்ந்து சேதப்படுத்துகிறது- கரடிகள் அட்டகாசத்தால் விவசாயிகள் அச்சம்

Published On 2022-04-22 15:31 IST   |   Update On 2022-04-22 15:31:00 IST
களக்காடு பகுதியில் கரடி கூட்டங்கள் ஊருக்குள் புகுந்து வாழைகளை தொடர்ந்து சேதப்படுத்துகிறது. இதனால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
களக்காடு:


களக்காடு அருகே உள்ள கீழவடகரை பூலாங்குளம் விளை நிலங்களில் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக கரடிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. 

கோடை வெப்பத்தால் வனப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வந்த கரடிகள் இரவு நேரங்களில் விளைநிலங்களுக்குள் புகுந்து வாழைகளை சாய்த்து வாழைக்காய்களை தின்று நாசம் செய்கின்றன.  

இதற்கிடையே நேற்று அதிகாலை கணேசன் என்பவரது விளைநிலங்களுக்குள் புகுந்த 3 கரடிகள் 10-க்கும் மேற்பட்ட வாழைத்தார்களை தின்று சேதப்படுத்தியுள்ளன. இதுவரை 100-க்கும் மேற்பட்ட வாழைகளை கரடிகள் நாசம் செய்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். 

கரடிகள் நடமாட்டத்தால் பகல் நேரங்களில் கூட விளைநிலங்களுக்கு செல்ல முடியவில்லை என்றும், எந்த நேரத்திலும் கரடிகள் தங்களை தாக்கும் அபாயம் நிலவுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். 


இதுபற்றி வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தும், அவர்கள் கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்டவும், நாசமான வாழைகளுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வேதனையுடன் கூறுகின்றனர். 

எனவே ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி வரும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Similar News