உள்ளூர் செய்திகள்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு பேசிய காட்சி.

வாழை பயிரிட்டதில் நஷ்டம் - தற்கொலை செய்த விவசாயி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்-குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்

Published On 2022-04-22 15:28 IST   |   Update On 2022-04-22 15:28:00 IST
வாழை பயிரிட்டதில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை செய்த விவசாயி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நெல்லையில் கலெக்டர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விஷ்ணு தலைமையில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அதில் ஏராளமான விவசாயிகள் அவரிடம் மனு அளித்தனர்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மானூர் ஒன்றிய செயலாளர் ஆபிரகாம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கானார்பட்டி விவசாயிகள் வாகைகுளம் கூட்டுறவு வங்கியில் 40 கிராம் வரை தங்க நகைகளை அடகு வைத்து விட்டு திருப்ப முடியாமல் உள்ளனர்.அதனை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மானூர் தனி தாலுகாவாக மாறிவிட்டது. ஆனால் இன்னும் இந்த பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்-படவில்லை. எனவே அங்கு தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பெரும்படையார் அளித்த மனுவில், நாங்குநேரி தாலுகா பட்டன் பிள்ளை புதூரில் வசித்து வந்த விவசாயியான வானு-மாமலை வாழை பயிரிட்டதில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும் நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக 15 நாட்களுக்கு நீடிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மானூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் இஸ்மாயில் பக்கீர் விவசாயிகளுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மானூர் அருகே உள்ள குறிச்சிகுளம் கிராமத்தில் பெரியகுளம், பட்டன் குளம், சின்ன குளம் ஆகிய 3 குளங்கள் உள்ளன.

இந்த குளங்கள் மூலமாக ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. தற்போது இந்த குளத்தின் மடைகள் அனைத்தும் தூர்ந்து கிடக்கின்றன. எனவே இந்த குளங்களின் கரையை உயர்த்தி மடைகளையும் சீரமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மேலும் மானூர் தாலுகாவுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களும் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். அங்கு தற்போது அதிக அளவில் மின்வெட்டு ஏற்படுகிறது.

இதனால் விவசாய பணிகள் முற்றிலும் தடைபட்டு வருகிறது.எனவே மின் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

Similar News