உள்ளூர் செய்திகள்
மீட்கப்பட்ட நிலத்தில் இந்து சமய அறநிலையத் துறையினரின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

அறநிலையத்துறைக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் மீட்பு

Published On 2022-04-22 13:44 IST   |   Update On 2022-04-22 13:44:00 IST
திண்டுக்கல் அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
தாடிக்கொம்பு:

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அடுத்துள்ள டி.கூடலூர் பகுதியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை சிலர் சட்ட விரோதமாக  ஆக்கிரமித்துள்ளதாக  புகார் எழுந்தது.

இதனை அடுத்து தமிழ்நாடு அரசு இந்து சமய மற்றும் அறக்கொடைகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

இந்நிலையில் டி.கூடலூர் வருவாய் கிராமத்தில் 7 இடங்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்கள் தாமாக முன்வந்து ஒப்படைப்பதாக அறிவித்தனர். அதன்படி திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா, செயல் அலுவலர் மாலதி, ஆய்வாளர் ரஞ்சனி ஆகியோர் முன்னிலையில் அந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

அதனை தொடர்ந்து 7 இடங்களிலும் நிலத்தின் புல எண்ணை குறிப்பிட்டு கோவிலுக்கு சொந்தமானதாக அறிவிப்புப் பலகை நிறுவப்பட்டது.

இதன் மூலம் கடந்த பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் பிடியிலும், அடையாளம் காணப்படாமலும் இருந்த 50 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நிலத்தின் மதிப்பு ரூ.4 கோடி என அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி தெரிவித்தார்.

இதேபோல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம், குஜிலியம்பாறை, கரூர் பிரதான சாலையையொட்டி அமைந்துள்ளது. அந்த இடத்தில் கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. அந்த இடமும் விரைவில் கையகப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News