உள்ளூர் செய்திகள்
மோகனூர் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
மோகனூர் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தினர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூர், மோகனூர், கரூர் மாவட்டம் நெரூர் இடையே ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காவிரி ஆற்றின் குறுக்கே 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைக்க வலியுறுத்தி, விவசாய முன்னேற்ற கழகம் சார்பில் மோகனூர் காவிரி ஆற்றங்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய முன்னேற்றக் கழக நிறுவனர் தலைவர் செல்ல. ராசாமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் ராமசாமி மற்றும் நாமக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் கைகளில் கரும்புகள், முளைப்பாலிகை ஆகியவற்றை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து விவசாயிகள் மோகனூர் காவிரி ஆற்றில் இறங்கி தங்களுடைய கோரிக்கைகளை தெரிவிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் தலைவர் செல்ல.ராசாமணி பேசுகையில், இந்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தினால் நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த விவசாய நிலங்கள் வருடம் முழுவதும் வறட்சியின்றி பாசன வசதி அடையும். நிலத்தடி நீர்மட்டம் உயரும். எனவே இந்த திட்டத்தை மீண்டும் விவசாயிகள் நலன் கருதி செயல்படுத்த வேண்டும் என்றார்.