உள்ளூர் செய்திகள்
கார் விபத்தில் தொழில் அதிபர் மனைவி பலி
மேலூர் அருகே நடந்த கார் விபத்தில் தொழில் அதிபர் மனைவி பலியானார்.
மேலூர்
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ்(வயது30). இவர் அங்கு பேன்சி ஸ்டோர், பாத்திரங்கள், பர்னிச்சர் போன்றவற்றை விற்கும் தொழில் செய்து வருகிறார்.
இன்றுகாலை ஜெய்கணேஷ் திருச்செந்தூர் செல்வதற்காக தனது மனைவி மகேஸ்வரி (27) உடன் காரில் புறப்பட்டார். காரை அவரே ஓட்டி வந்தார். மதுரை மாவட்டம் மேலூர் 4 வழிச்சாலையில் இன்று மதியம் 1.30 மணிக்கு கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே டிராக்டர் வந்தது. அந்த டிராக்டர் கூத்தப்பன்பட்டி விலக்கு பகுதியில் தவறானதிசையில் திரும்பியது.
இதனை ஜெய்கணேஷ் கவனிக்கவில்லை. இதனால் வேகமாக வந்த கார் டிராக்டர் மீது மோதியது. இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு அலுவலர் வீரணன் தலைமையிலான வீரர்கள் விரைந்துவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே பலியானார். காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட அவரது உடலை தீயணைப்பு படையினர் போராடி மீட்டனர். ஜெய்கணேஷ் காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துகுறித்து மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.