உள்ளூர் செய்திகள்
பேராயராக கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள ஜோசப்புக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி.

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பேராயர் பொறுப்பேற்பு

Published On 2022-04-21 16:01 IST   |   Update On 2022-04-21 16:01:00 IST
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பிஷப் பணிகளை கவனிக்க பிரதம பேராயரின் ஆணையராக மதுரை-ராமநாதபுரம் திருமண்டல பிஷப் எம்.ஜோசப் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பேராயர் ஜோசப் பொறுப்பேற்று கொண்டார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்துக்கான தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்தது. இதில் குருவானவர் தமிழ்ச்செல்வன் உப தலைவராகவும், குருவானவர் இம்மானுவேல் வான்ஸ்டக் குருத்துவ செயலராகவும், நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் லே செயலராகவும், மோகன்ராஜ் அருமை நாயகம் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிககளை நிர்வாகம் செய்யவிடாமல் பிஷப் தேவசகாயம் இடையூறாக இருப்பதாகவும், தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் புதிய நிர்வாகிகள் தென்னிந்திய திருச்சபையின் தலைமையிடமான சினாட்டில் புகார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தென்னிந்திய திருச்சபையின் நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பிஷப் தேவசகாயத்தை தற்காலிகமாக நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கபட்டது.

மேலும், தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பிஷப் பணிகளை கவனிக்க பிரதம பேராயரின் ஆணையராக மதுரை- ராமநாதபுரம் திருமண்டல பிஷப் எம்.ஜோசப் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பிரதம பேராயரின் ஆணையராக நியமிக்கப்பட்ட பிஷப் எம்.ஜோசப் நேற்று மாலை தூத்துக்குடிக்கு வந்தார். அவருக்கு தூத்துக்குடி புதூர்-பாண்டியாபுரம் பகுதியில் புதிய நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து திருமண்டல அலுவலகத்துக்கு சென்ற பிஷப் ஜோசப், அங்கு பொறுப்பேற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் உயர்நிலை பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங், தொடக்கப் பள்ளிகளின் மேலாளர் ஜாஸ்பர் மற்றும் சபை மன்ற தலைவர்கள், குருவானவர்கள், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் உள்ள புதுப்பிக்கப்பட்ட ஆலய பிரதிஷ்டை நிகழ்ச்சியில் பிஷப் ஜோசப் கலந்து கொண்டு ஆலயத்தை திறந்து வைத்தார்.

Similar News