உள்ளூர் செய்திகள்
காய்கறி மார்க்கெட் வியாபாரிகளுடன் ஆலோசனை
குமாரபாளையத்தில் காய்கறி மார்க்கெட் வியாபாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
குமாரபாலையம்,
குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடங்கள் மிகவும் பழுதானதால் அவைகள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. கட்டுமான பணிகள் நடைபெற்று முடியும் வரை தற்காலிகமாக எந்த இடத்தில் மார்க்கெட் அமைப்பது? என்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இது குறித்து நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் கூறியதாவது:
தற்போதுள்ள தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் சேதமானதால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 கோடியே 28 லட்சம் மதிப்பில் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட உள்ளது.
கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக மார்க்கெட் செயல்படும் இடம் தேர்வு செய்யப்படுவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வாரச்சந்தை அல்லது காவேரி பாலம் அருகில் உள்ள காலி இடம் ஆகியன குறித்து கருத்து கூறினார்கள்.
இரண்டு நாளில் முடிவாக எங்கு வைத்துக்கொள்வது என்பது குறித்து முடிவு சொல்வதாக வியாபாரிகள், குத்தகைதாரர்கள் கூறி சென்றனர். அவர்களின் முடிவை பொறுத்து, அவர்கள் குறிப்பிடும் இடத்தில் தற்போதுள்ள கடைகளின் மேற்கூரைகள் அகற்றப்பட்டு, குறிப்பிடும் இடத்தில் நிறுவப்படும். புதிய கட்டுமான பணிகள் நிறைவு பெற ஒரு வருட காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கமிஷனர் சசிகலா, பொறியாளர் ராஜேந்திரன், மேலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.