உள்ளூர் செய்திகள்
.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

Published On 2022-04-21 09:50 GMT   |   Update On 2022-04-21 09:50 GMT
ஜேடர்பாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியானார்.
பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அசோகன்(வயது  63). இவர் கடந்த 1ந் தேதி மதியம்2.30 அளவில் ஜேடர் பாளையத்திலிருந்து கபிலர்மலையை நோக்கி தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். 

தண்ணீர் பந்தல் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அசோகன் ஓட்டி வந்த மோட்டார் பைக் மீது மோதி நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அசோகன் மோட்டார் பைக்குடன் தார் சாலையில் கீழே விழுந்தார்.

இதனால் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து ஜேடர் பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News