உள்ளூர் செய்திகள்
திருச்செந்தூர் அருகே மீன் பிடித்தொழிலாளி கொலையில் 5 பேர் கைது
திருச்செந்தூர் அருகே மீன் பிடித்தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி திரேஸ்புரம் அண்ணா காலனி பகுதியை சேர்ந்தவர் மதன் என்ற மதன்குமார் (வயது24). மீன்பிடி தொழிலாளி.
இவர் திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையில் இருந்து மறவன்விளை செல்லும் சாலையோர காட்டுப்பகுதியில் கடந்த 18-ந்தேதி இரவு ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்து புதைக்கப்பட்டார்.
இதுகுறித்து திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் மதன்குமாரை முன்விரோதம் காரணமாக ஆலந்தலை பகுதியை சேர்ந்த லயோ (27), ராஜா (27), ஜாக்சன் (26), தூத்துக்குடி தாளமுத்துநகரை சேர்ந்த முத்துமல்லையா (34) மற்றும் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த மரிய அந்தோணிராஜ் (29) ஆகியோர் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மதன் குமாரின் 2 கால்கள் மற்றும் தலையை அரிவாளால் வெட்டிக்கொலை செய்து குழி தோண்டி மண்ணில் புதைத்தது தெரியவந்தது.
மேலும் தொழில் போட்டி தொடர்பாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என 5 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.