உள்ளூர் செய்திகள்
ராமநாதபுரம் அருகே 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி முக்கிய பகுதிகளில் போலீசார் ரோந்துபணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ராமநாதபுரம் அருகே உள்ள புதுவலசை பகுதியில் தேவிபட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது புதுவலசை பஸ்ஸ்டாப்பில் 2 சாக்கு மூடைகளுடன் 4 பேர் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தனர். போலீசார் அவர்களிடம் விசாரிக்க சென்றனர். இதையடுத்து 4 பேரும் அங்கிருந்து தப்பி முயன்றனர். சுதாரித்துக் கொண்ட போலீசார் உடனே அவர்களை விரட்டிச் சென்றனர். இதில் 2 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர். மற்ற 2 பேர் தப்பினர்.
பிடிபட்ட 2 பேர் வைத்திருந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் 10 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் போலீசாரிடம் கஞ்சா கடத்தி சிக்கியது புதுவலசை அருகே உள்ள தாவுகாடு கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (26), கோகுல்ராஜ் (24) என தெரியவந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்தனர் தப்பி ஓடிய அலெக்ஸ் பாண்டி (25), அருண்குமார் (24) ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.