உள்ளூர் செய்திகள்
மறியலில் ஈடுபட் காட்சி

கைதானவர்களை விடுவிக்க கோரி பா.ஜ.க.வினர் சாலை மறியல்

Published On 2022-04-20 09:08 GMT   |   Update On 2022-04-20 10:36 GMT
கைதானவர்களை விடுவிக்க கோரி பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர்:

கரூரில் தி.மு.க. சுவர் விளம்பரத்தை அழித்தவர்களை போலீஸார் கைது செய்ய, அவர்களை விடுவிக்கக்கோரி சாலை மறியல் செய்த பா.ஜ.க.வினர் 236 பேரை கரூர் நகர போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தங்கள் சுவர் விளம்பரங்களை அழித்த பா.ஜ.க நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என எஸ்.பி. அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி. கண்ணனிடம் தி.மு.க மத்திய மாநகர பொறுப்பாளர் எஸ்.பி.கனகராஜ் புகார் அளித்தார்.

  கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் கடந்த 14-ந் தேதி பா.ஜ.கவின் சுவர் விளம்பரத்தை தி.மு.க.வினர் அழித்ததாகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க.வினரை தி.மு.க.வினர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பா.ஜ.க.வினர் சாலை மறியல் செய்துடன் இதுகுறித்து எஸ்.பி.யிடம் புகார் அளித்தனர்.   

புகார் அளித்து 5 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மாவட்டத்தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் தி.மு.க.வின் சுவர் விளம்பரங்களை அழிக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்த உதயசூரியன் சின்னம் உள்ளிட்ட தி.மு.க விளம்பரங்களை அழித்தனர்.

  விளம்பரங்களை அழித்த 3 பேரை கரூர் நகர போலீஸார் கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். இதனை கண்டித்து கரூர், திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருகாம்புலியூர் மேம்பால இறக்கத்தில் மாவட்டத்தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


   இதையடுத்து பாதுகாப்பு காரணமாக அவ்வழியே செல்லும் வாகனங்களை போலீஸார் மறியல் நடைபெறும் இடத்திற்கு முன்பே தடுத்து நிறுத்தினர். மேலும், போலீஸார் கைது செய்து பா.ஜ.கவினரை ஏற்றியிருந்த வாகனம் முன்பும் சாலையில அமர்ந்து மறியல் செய்தனர்.

ஏ.டி.எஸ்.பி.க்கள் ராதாகிருஷ்ணன், கண்ணன், டி.எஸ்.பி. தேவராஜ், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் போராட்டத்தை கை விட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்ளிட்ட 236 பேரை கரூர் நகர போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News