உள்ளூர் செய்திகள்
தமிழக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள செயற்கை கோள் செல்போன்.

முல்லை பெரியாறு அணை பொறியாளர்களுக்கு செயற்கைக்கோள் செல்போன்

Published On 2022-04-14 15:35 IST   |   Update On 2022-04-14 15:35:00 IST
முல்லை பெரியாறு அணையில் பணியாற்றும் பொறியாளர்களுக்கு பேரிடர் கால பயன்பாட்டிற்காக தமிழக அரசு சார்பில் செயற்கைகோள் செல்போன் வழங்கப்பட்டுள்ளது.
கூடலூர்:

முல்லை பெரியாறு அணைப்பகுதியில் பருவமழை காலங்களில் தமிழக அதிகாரிகள் தகவல்களை பரிமாறிக் கொள்வதில் சிரமம் இருந்து வந்தது. கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கனமழை பெய்தது.

அதிக அளவு உபரிநீர் வெளியேற்றப்பட்ட சமயங்களில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அணைப்பகுதியில் பணியாற்றும் பொறியாளர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க முடியவில்லை.

ஆனால் கேரள அதிகாரிகள் செயற்கைகோள் செல்போன் மூலம் கேரள அரசுக்கு தகவல் தெரிவித்தனர். இதேபோல் கடந்த ஆண்டு அணைப்பகுதிக்கு எவ்வித முன்னறிவிப்புமின்றி கேரள மந்திரி தன்னிச்சையாக சென்று அணையிலிருந்து உபரிநீரை வெளியேற்றினார்.

இது தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்தியது. இதுபோன்ற சமயங்களில் தகவல் பறிமாற்றத்திற்காக கேரள பொறியாளர்களைப் போல தமிழக அதிகாரிகளுக்கும் செயற்கைகோள் செல்போன் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக செயற்பொறியாளர் தெரிவிக்கையில், பேரிடர் காலங்களில் அணைக்கு வரும் தண்ணீர் அளவு, நீர்மட்டம், நீர் இருப்பு போன்ற விவரங்களை உடனுக்குடன் தெரிவிக்க முடியாமல் காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் தமிழக படகு ஏரியின் நடுப்பகுதியில் திடீரென நின்று விடுகிறது.

இதனை கருத்தில் கொண்டு அதிநவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது. அதன் பேரில் செயற்கைகோள் செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 6 ரிசீவர்கள் உள்ளன.

அணைப்பகுதி, படகு, செயற்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், தலைமை பொறியாளர் ஆகியோரிடம் இந்த செல்போன்கள் இருக்கும். பேரிடர் காலங்களில் இது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

Similar News