உள்ளூர் செய்திகள்
அரியாங்குப்பம் பகுதியில் ரவுடிகள் வீடுகளில் போலீசார் சோதனை நடத்திய காட்சி

அரியாங்குப்பம் பகுதியில் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு- ரவுடிகள் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை

Published On 2022-03-12 12:43 IST   |   Update On 2022-03-12 12:43:00 IST
அரியாங்குப்பம் பகுதியில் அரசு உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் அதிகம் உள்ள பகுதியில் குற்ற சம்பவங்கள் நடந்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாகூர்:

புதுவை தெற்கு போலீஸ் சூப்பிரண்டு கண்காணிப்பில் முதலியார்பேட்டை, அரியாங் குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், கரையாம்புத்தூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் உள்ளது.

இதில் அதிக குற்ற சம்பவங்கள் மற்றும் குற்றவாளிகள் அதிகமுள்ள பகுதியாக அரியாங்குப்பம் முதலிடத்திலும், முதலியார்பேட்டை 2-வது இடத்தில் இருந்து வருகிறது.

அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வெடிகுண்டு கலாச்சாரம், கஞ்சா விற்பனை மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது.

இதனைத் தடுக்க போதிய போலீஸ் இல்லாததால் இந்த சம்பவங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

அரியாங்குப்பம் பகுதியில் அரசு உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் அதிகம் உள்ள பகுதியில் குற்ற சம்பவங்கள் நடந்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக 10 குற்றவாளிகள் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் ஜெயிலில் இருந்து உள்ளூரில் உள்ள ரவுடிகளை கொண்டு இயக்கி வருவதும் தெரியவந்துள்ளது. ஆனால் போலீசார் இதனை கண்டு கொள்வதில்லை. இது சம்பந்தமாக அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் அரசுக்கும், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்துள்ளனர்.

கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ரவுடிகளை ஒடுக்கும் வகையில் புதுவை காவல்துறை விடியல் ஆபரே‌ஷன் என்ற புதிய திட்டத்தை உருவாக்கி உள்ளது.

இதன்படி குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்துவது, மேலும் ஆயுதங்கள் பறிமுதல் செய்வது என ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தீபிகா தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், இன்ஸ்பெக்டர்கள் வரதராஜன், சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள். மற்றும் போலீசார் அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திடீரென ரவுடிகள் வீடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.

அவர்கள் இரு பிரிவாக அரியாங்குப்பம் பகுதியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். மேலும் பழுதடைந்த கட்டிடங்கள், ஒதுக்குப்புற இடங்களிலும் சோதனை செய்தனர். ஆனால் குற்றவாளிகள் உஷாரானதால் போலீசார் அவர்கள் யாரையும் பிடிக்க முடியவில்லை. மேலும் ரவுடிகளின் வீடுகளில் எந்த ஆயுதமும் பறிமுதல் செய்யப்படவில்லை.

அதிகாலையில் போலீஸ் உயர் அதிகாரிகள் ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை செய்த சம்பவம் அரியாங்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News