உள்ளூர் செய்திகள்
வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து
கரிக்கலாம்பாக்கத்தில் முன்விரோதத்தில் வாலிபரை பீர் பாட்டிலால் குத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் கோட்டைமேடு தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது30). இவருக்கு திருமணமாகி அனிதா என்ற மனைவியும், 4 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.
அனிதா தற்போது தமிழ்நாடு காவல்துறையில் பணி கிடைத்து பயிற்சி பெற்று வருகிறார். செல்வத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த மாதவன் என்பவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் செல்வம் அப்பகுதியில் உள்ள மதுக்கடைக்கு மது குடிக்க சென்றார். அப்போது அங்கு மாதவன் தனது நண்பர்களுடன் மது குடித்துக் கொண்டிருந்தார். மது போதையில் முன் விரோதத்தை மனதில் வைத்து மாதவன் தனது நண்பருடன் சேர்ந்து செல்வத்தை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார்.
மேலும் பீர் பாட்டிலை உடைத்து செல்வத்தின் தலையில் குத்தினார். அதோடு இதே இடத்தில் கொலை செய்துவிடுவதாக செல்வத்தை மிரட்டிவிட்டு மாதவன் தனது நண்பர் களுடன் அங்கிருந்து சென்று விட்டார்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்வத்தை அங்கிருந் தவர்கள் மீட்டு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் செல்வம் அனுமதிக்கப்பட்டார். அங்கு செல்வம் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவரது சகோதரர் செல்வத்துரை கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மாதவன் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகிறார்கள்.