உள்ளூர் செய்திகள்
முகமூடி அணிந்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்
முகமூடி அணிந்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.
சாலை விரிவாக்கத்துக்காக திருவண்டார் கோவிலில் இருந்து மதகடிப்பட்டு வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனைமரங்கள் அகற்றப்பட்டு வருகிறது.
திருபுவனையில் ஏரிக்கரை யோரம் இருந்த பனை மரங்களும் வெட்டப்பட்டு வருகின்றன. இதற்கு அப்பகுதியில் உள்ள விவசாயிகள் சங்கத்தினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை புதுவை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு சுற்றுச்சூழல் ஆர்வலர் இயக்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் கீதநாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பனைமர முகமூடி அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பனை மரங்களை அகற்று வதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும். விவசாயிகள் பாதிக்கப்படுவர். எனவே, பனை மரங்களை அகற்றாமல் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.