உள்ளூர் செய்திகள்
விவசாயிகள் போர்வையில் வியாபாரிகள் அடாவடி- உழவர்சந்தையில் கூடுதல் விலையில் காய்கறிகள்
உழவர்சந்தையில் வியாபாரிகள் அடாவடித்தனம் செய்து காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர்.
புதுச்சேரி:
விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்கள் பொதுமக்களுக்கு நேரடியாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும், இதன் மூலம் விவசாயிகளும், பொது மக்களும் பயன்பெற வேண்டும் என்ற உன்னத திட்டத்தில் தமிழகத்தில் முதல் முறையாக உழவர்சந்தை கொண்டு வரப்பட்டது.
அதனைத்தொடர்ந்து புதுவையிலும் உழவர்சந்தைகள் தொடங்கப்பட்டன. புதுவை பழைய பஸ் நிலையம், லாஸ்பேட்டை, அரியாங்குப்பம், அரும்பார்த்தபுரம் உள்ளிட்ட பல இடங்களில் உழவர்சந்தை ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், நாளடைவில் இதற்கு வரவேற்பு இல்லாததால் பழைய பஸ் நிலையத்தில் உள்ள உழவர்சந்தையை தவிர மற்ற இடங்களில் உழவர்சந்தைகள் செயல்படவில்லை.
பழைய பஸ் நிலையத்தில் உள்ள உழவர்சந்தைக்கு கிராமப்புற பகுதிகளில் இருந்து கீரை வகைகள், கத்தரிக்காய், வெண்டைக்காய், வாழைக்காய், கொத்தவரங்காய், பாகற்காய், மாங்காய் உள்ளிட்ட காய்கறி வகைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.
குறைந்த விலையில் இவைகள் விற்பனை செய்யப்படுவதால் நகர பகுதி மக்கள் வாங்கி பயனடைந்து வந்தனர். ஆனால், நாளடைவில் விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.
இது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களும், விவசாயிகளும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கிய உழவர்சந்தை தற்போது வியாபாரிகள் சந்தையாக மாறிவிட்டது என பொதுமக்கள் ஆதங்கத்துடன் கூறுகின்றனர்.