உள்ளூர் செய்திகள்
மாநகராட்சி மன்ற கூடத்தில் தூய்மை பணி நடந்து வருகிறது.

ஈரோடு மாநகராட்சியில் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்க ஏற்பாடுகள் தீவிரம்

Published On 2022-02-24 15:34 IST   |   Update On 2022-02-24 15:34:00 IST
புதிய உறுப்பினராக தேர்ந் தெடுக்கப்பட்டவர்களுக்கு பதவியேற்பு விழா வரும் 2-ந் தேதி மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இதனால் மாநகராட்சியில் பதவியேற்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 ஈரோடு:

புதிய உறுப்பினராக தேர்ந் தெடுக்கப்பட்டவர்களுக்கு பதவியேற்பு விழா வரும் 2-ந்  தேதி மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இதனால் மாநகராட்சியில் பதவியேற்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60 வார்டுகளில்  தி.மு.க. 43 வார்டுகளையும்,  காங்கிரஸ் 3 வார்டுகளையும், கொ.ம.தே.க, ம.தி.மு.க. தலா ஒரு வார்டுகளையும் என மொத்தம் 48 வார்டுகளை தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று ஈரோடு மாநகராட்சியை  கைப்பற்றியுள்ளது.

ஈரோடு மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சியின் பெண் மேயர் யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

புதிய உறுப்பினராக தேர்ந் தெடுக்கப்பட்டவர்களுக்கு பதவியேற்பு விழா வரும் 2-ந்  தேதி மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. அன்றைய தினம் முதல் கூட்டம் நடைபெறுகிறது. 

அதைத்தொடர்ந்து 4-ந் தேதி மேயர், துணை மேயருக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இதில் கவுன்சிலர்கள் மேயரையும், துணை மேயரையும்  தேர்ந்தெடுப்பார்கள்.  மாநகராட்சியில் தற்போது இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மாநகராட்சியில் கூட்ட அரங்கில் தேர்தலின் போது சேர்கள் அகற்றப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன.  

தற்போதும் மீண்டும் அதே இடத்தில் சேர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. கூட்டரங்கு வளாகம் முழுவதும் தூய்மை பணிகள் நடைபெறுகின்றன. 

மாநகராட்சி அலுவலகத்தின் முதல் தளத்தில் மேயர் அறையும், 2-ம் தளத்தில் துணை மேயர் அறையும் உள்ளது. நீண்ட வருடமாக அறைகள் பூட்டப்பட்டு இருந்தது. 

தற்போது இந்த அறைகள் திறக்கப்பட்டு அங்கு தூய்மை பணிகள், பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் அங்கு வர்ணம் பூசப்பட்டு வருகின்றன.

Similar News