உள்ளூர் செய்திகள்
சட்டசபையை 10 நாட்கள் நடத்த வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுவை சட்டசபையை 10 நாட்கள் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி :
புதுவை சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை சட்டமன்ற நடைமுறை மற்றும் அலுவல் விதி 5 பிரிவு 21 படியும் புதுவை சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மரபுகளின்படியும் கவர்னர் ஒவ்வொரு ஆண்டின் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் ஆரம்பத்தில் உரையை நிகழ்த்த வேண்டும் ஆனால், இந்த விதிகளை எல்லாம் மீறி கவர்னர் உரை இடம்பெறாமல் சட்டப்பேரவை கூட்டப்பட்டுள்ளது
இது புதுவை சட்டப் பேரவையின் விதிகளையும், மரபுகளையும் மீறிய செயலாகும். மேலும் மக்கள் பிரச்சினைகளை பற்றி விவாதிக்க நேரம் ஒதுக்காமல் கூட்டத்தொடரை ஒரு நாளில் நடத்தி முடிக்க திட்ட மிட்டிருப்பது கண்டனத்துக்கு உரியதாகும்.
எனவே மரபுகளை மீறாமலும் கவர்னர் உரையை இடம் பெற வழிவகை செய்து, மக்கள் பிரச்சினை பற்றி விவாதிக்க குறைந்தபட்சம் 10 நாட்களாவது கூட்டத்தை நடத்த வேண்டும்.
இவ்வாறு வைத்தியநாதன் அறிக்கையில் கூறியுள்ளார்.