உள்ளூர் செய்திகள்
வாரிய தலைவர் பதவி வழங்க ரங்கசாமி தயங்குவது ஏன்? முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கேள்வி
வாரிய தலைவர் பதவி வழங்க ரங்கசாமி தயங்குவது ஏன்? என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-
மத்தியில் பா.ஜ.க. அரசு வந்தபின், மாநில அதிகாரத்தில் இருந்த கல்வி, மருத்துவம், உட்பட பல துறைகள் மத்திய அரசின் அதிகாரத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மருத்துவ துறையில் நீட் தேர்வை கொண்டு வந்து, மத்திய பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவதால், தமிழகம், புதுவை மாணவர்கள் பலர் தோல்வி அடைகின்றனர்.
நீட் தேர்வில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் நிலைப்பாடு என்ன? நீட் தேர்வை ஆதரித்தால், புதுவையில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர் களுக்கு துரோகம் செய்வதாக அமையும். கடந்த காங்கிரஸ் ஆட்சியில், கவர்னர் கிரண் பேடி, அரசின் முடிவையும், அமைச்சரவை முடிவையும் நிராகரித்து கோப்புகளை திருப்பி அனுப்பினார்.
அவர் மத்திய அரசின் ஏஜென்டாகவும், கைப்பாவையாகவும் செயல்பட் டது மக்களுக்கு தெரியும். பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன் எத்தனை முறை தேர்தலில் நின்றாலும் தோல்வி அடைவார்.
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட காரைக்கால், நாகை மீனவர்களை விடுவிக்க மத்திய அரசுக்கு, மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சியில் ஆண்டுதோறும் 10 சதவீதம் அதிகமாக மத்திய அரசிடம் மானிய நிதி வாங்கினோம். தற்போதைய அரசு 10 பைசா கூட கூடுதலாக பெறவில்லை. ரங்கசாமி அறிவித்த எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. ஒட்டு மொத்தமாக செயல்படாத அரசாக உள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் கட்சிக்காரர்களுக்கு வாரியத் தலைவர் பதவிகளை வழங்க முடியாத சூழ்நிலையை கவர்னர் கிரண்பேடி ஏற்படுத்தினார். ஆனால், எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவி, ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் வழங்கப் பட்டது. தற்போது ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகியும் வாரியத்தலைவர் பதவிகள் வழங்கப்படவில்லை.
எம்.எல்.ஏ.க்களுக்கு வாரியத் தலைவர் பதவியை வழங்க ரங்கசாமி ஏன் தயங்க வேண்டும்? லாபத்தில் இயங்கும் வாரியங்களுக்கு தலைவர் பதவி அளிப்பதில் என்ன பிரச்னை உள்ளது? இதே நிலை நீடித்தால் மாநில வளர்ச்சி பாதாளத்துக்கு சென்றுவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.