உள்ளூர் செய்திகள்
போட்டோ விற்பனை கடையில் தீ விபத்து
ஆரணியில் போட்டோ விற்பனை கடையில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.
ஆரணி:
ஆரணி டவுன் தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது40). இவர் அப்பகுதியில் போட்டோ உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
வழக்கம் போல் இன்று காலை கடையை திறப்பதற்காக கமலக்கண்ணன் சென்றார். கடையை திறந்து உள்ளே சென்று விற்பனையில் ஈடுபட்டார்.
காலையில் உணவை முடிந்துவர அருகில் இருந்து ஓட்டலுக்கு சென்றார். அப்போது திடீரென்று கடையில் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
இத்தகவலை அறிந்து கமலக்கண்ணன் கடைக்கு ஓடிவந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார்.
தீ வேகமாக பரவியதால் இதுகுறித்து ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
கடையில் இருந்த கம்ப்யூட்டர், கேமரா, உதிரி பாகங்கள், ஆல்பம் உள்ளிட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரணி டவுன் போலீசார் கமலக்கண்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.