உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கணவன் கண் எதிரே பெண்ணிடம் செயின் பறிப்பு

Published On 2022-01-17 04:27 GMT   |   Update On 2022-01-17 04:27 GMT
திருக்கனூர் அருகே கணவன் கண் எதிரே பெண்ணிடம் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் செயினை பறித்து சென்றார்.
புதுச்சேரி:

வில்லியனூர் புதுநகர் கணுவாப்பேட்டையை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 40). இவரது மனைவி பிரேமா (34).  இவர்கள்  செஞ்சியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று பூஜை முடித்து விட்டு தனித்தனியாக மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டு இருந்தனர். 

திருக்கனூர் அருகே தமிழக பகுதியான பக்கிரிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்த  போது, ஹெல்மெட்  அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த  மர்ம நபர் திடீரென பிரேமா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி செயினை பறித்தார்.  உடனே பிரேமா சுதாரித்துக்கொண்டு 
செயினை இருக்கமாக  பிடித்தார். ஆனாலும்,  3 பவுன் செயின்  திருடன் கையில் சிக்கிக் கொண்டது. மீதி 3 பவுன் செயின் மட்டுமே தப்பியது.

இதையடுத்து அந்த மர்ம நபரை கருணாகரன் பிடிக்க முயன்ற போது அவன் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்று விட்டான். இந்த சம்பவத்தில்  நிலை தடுமாறி கீழே விழுந்த பிரேமாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

இதையடுத்து பிரேமாவை அவரது கணவர் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார். பின்னர் இதுகுறித்து கருணாகரன் கண்டமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News