உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரிப்பு- புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு

Published On 2022-01-06 08:55 IST   |   Update On 2022-01-06 08:55:00 IST
புதுவையில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிகிறது.
புதுச்சேரி:

புதுவையில் குறைந்திருந்த கொரோனா தொற்று சமீப நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு இரட்டை இலக்கத்துக்கு மாறி கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 727 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 73 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஏனாமினை தவிர மற்ற பிராந்தியங்களிலும் தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது.

தற்போது ஆஸ்பத்திரிகளில் 59 பேர், வீடுகளில் 219 பேர் என 278 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 9 பேர் குணமடைந்தனர்.

புதுவையில் தொற்று பரவல் 2.68 சதவீதமாகவும், குணமடைவது 98.34 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 1,809 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 2 ஆயிரத்து 681 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 14 லட்சத்து 15 ஆயிரத்து 406 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

தொற்று பரவலானது புதுவை மாநிலத்தில் படிப்படியாக அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பிற மாநிலங்களைப்போல் புதுச்சேரியிலும் புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அமல்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தொற்று பரவல் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக முதல்-அமைச்சருடன் கலந்து ஆலோசித்து அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News