உள்ளூர் செய்திகள்
தேசிய இளைஞர் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி 12-ந்தேதி புதுவைக்கு வருகை - கவர்னர் தமிழிசை அறிவிப்பு
தேசிய இளைஞர் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி 12-ந்தேதி புதுவை வருகிறார்
புதுச்சேரி:
தேசிய இளைஞர் விழா வருகிற 12-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை புதுவையில் நடக்கிறது.
நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டை முன்னிட்டு நடைபெறும் விழாவை முன்னிட்டு நாடு முழுவதிலும் இருந்து 7 ஆயிரத்து 500 இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.
இதை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருவார் என தகவல் வெளியானது. இதற்கான ஏற்பாடுகளும் துரிதகதியில் நடந்து வந்தது. பிரதமர் வருகையை மாநில அரசு உறுதி செய்யவில்லை.
இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கவிழா சுசீலாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கவர்னர் தமிழிசை தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் வருகையை கவர்னர் தமிழிசை உறுதி செய்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:&
நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டை முன்னிட்டு தேசிய இளைஞர் தின விழா புதுவையில் நடைபெற உள்ளது. இந்த விழாவின் தொடக்கவிழா புதுவை பல்கலைக்கழகத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி புதுவைக்கு வருகிறார். விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
விழா ஏற்பாடுகளை பார்வையிட 5-.1.2022 அன்று மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக்தாக்கூர் புதுவைக்கு வருகிறார். அவர் பல்கலைக்கழகத்தில் பிரதமர் பங்கேற்கும் அரங்கம், பணிகளை பார்வையிடுகிறார்.
தேசிய இளைஞர் விழா புதுவையில் நடப்பது நமக்கு கிடைத்த பெருமையாகும். விழாவில் பங்கேற்போர் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் விழா நடைபெறும். புதுவைக்கு வரும் பிரதமர் அரவிந்தர் ஆசிரமத்துக்கு செல்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.