உள்ளூர் செய்திகள்
சம்பவம் நடந்த அந்தரே பண்ணை வீடு.

தொழிலதிபர் வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் பணம்-செல்போன் கொள்ளை

Published On 2022-01-04 12:25 IST   |   Update On 2022-01-04 12:25:00 IST
ஆரோவில்லில் தொழிலதிபர் வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் பணம் மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேதராப்பட்டு:

சுவிட்சர்லாந்து நாட்டை பூர்வீகமாக கொண்டவர் அந்திரே (வயது 32). இவரது பெற்றோர் குஜராத்தில் பல ஆண்டு காலம் வசித்து வந்தனர். பின்னர் ஆரோவில் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த அந்திரே புதுவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கல்வி பயின்றார்.

தற்போது ஆரோவில் அருகே உள்ள இடையஞ்சாவடி-கருவடிகுப்பம் சாலையில் உள்ள பண்ணை வீட்டில் அவரும் அவரது மனைவியும் வசித்து வருகின்றனர். அந்திரே இ-காம் என்று சொல்லக்கூடிய ஆன்லைன் வர்த்தகம் செய்து வருகிறார். ஆரோவில் வாசியாகவும் உள்ளார். அவர்களது வீட்டில் நேபாளத்தைச் சேர்ந்த சித்துரு (38) காவலாளியாக இருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை அந்திரேயும் அவரது மனைவியும் வீட்டில் இருந்தனர். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் தாகமாக இருக்கிறது தண்ணீர் வேண்டும் என்று காவலாளி சித்துருவிடம் கேட்டனர்.

சித்துரு சிறிது யோசனைக்குப்பின் வீட்டிலிருந்து தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தார்.

அதை குடித்த வாலிபர்கள் மேலும் தங்களுக்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்டனர். அதற்காக கேட்டைத் திறக்கும்படியும் கூறினர்.

சந்தேகமடைந்த காவலாளி கேட்டை திறக்க மறுத்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு வாலிபர் கேட்டின் மேல் ஏறி உள்ளே குதித்து கத்தியை காவலாளி கழுத்தில் வைத்து கேட்டை திறக்கும்படி கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காவலாளி கேட்டை திறந்த உடனேயே மற்ற 2 பேரும் உள்ளே புகுந்தனர். அங்கு அறையில் இருந்த பையை தூக்கிச்சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். அந்த பையில் 35 ஆயிரம் பணம் மற்றும் 3 செல்போன்கள் இருந்தது.

இதுகுறித்து காவலாளி சித்துரு கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசன் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணை அடிப்படையில் கிடைத்த தகவலின்படி கருவடிக்குப்பத்தை சேர்ந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 பேர் சிக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆரோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News