உள்ளூர் செய்திகள்
மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்த காட்சி

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி: முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

Published On 2022-01-03 08:11 GMT   |   Update On 2022-01-03 10:07 GMT
கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:

நாடு முழுவதும் 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

புதுவையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர், சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த 83 டோஸ் கோவேக்சின் மருந்து குப்பிகளை மத்திய அரசு முதல்கட்டமாக வழங்கியுள்ளது.

அரசின் சுகாதாரத்துறை மூலம் பள்ளி வளாகங்களிலேயே மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இன்று கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

தடுப்பூசி செலுத்திய மாணவர்களை ½ மணி நேரம் ஓய்வறையில் அமர வைத்து கண்காணித்து அனுப்பினர். மாணவர்களுக்கு மாத்திரை வழங்கி, காய்ச்சல் இருந்தால் உட்கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிப்படியாக மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. பள்ளிகள் மட்டுமின்றி அனைத்து அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது.




Tags:    

Similar News