உள்ளூர் செய்திகள்
தற்கொலை

கணவனால் ஏற்பட்ட கடனை அடைக்க முடியாத வேதனையில் பெண் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2022-01-01 15:34 IST   |   Update On 2022-01-01 15:34:00 IST
கணவன் வாங்கிய கடனுக்காக பதில் சொல்ல முடியாமல் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொண்டமாநத்தம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேதராப்பட்டு:

வில்லியனூரை அடுத்த தொண்டமாநத்தம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கோபாலன். இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி விட்டது.

இந்தநிலையில் கோபாலன் பலரிடம் பணம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதனை திருப்பி கொடுக்கமுடியாமல் கோபாலன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தலைமறைவாகி விட்டார்.

இந்நிலையில் 2 மகன்கள் வேலை செய்து தந்தை வாங்கிய கடனை அடைத்து வந்தனர். ஆனாலும் கடனை முழுமையாக அடைக்கமுடியவில்லை.

இதையடுத்து கடன் கொடுத்தவர்கள் தங்களுக்கு உரிய தொகையை உடனே கொடுக்க வேண்டும் என்று கூறி மணிமேகலையை தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மணிமேகலை மனம் உடைந்த நிலையில் இருந்து வந்தார்.

நேற்று மதியம் வேலைக்கு சென்ற தனது மூத்த மகன் லட்சுமி நாராயணனுக்கு போன் செய்து உடனே வீட்டுக்கு வரும்படி மணிமேகலை கூறினார். இதையடுத்து லட்சுமி நாராயணன் வீட்டுக்கு விரைந்து வந்தார். அப்போது தாய் சேலையால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே லட்சுமி நாராயணன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து மணிமேகலையை மீட்டு ராமநாதபுரத்தில் உள்ள ஜிப்மர் கிளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மணிமேகலை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன், ஏட்டு பாஸ்கரன்மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News