உள்ளூர் செய்திகள்
புதுவை கடற்கரையில் புத்தாண்டை கொண்டாடிய சுற்றுலா பயணிகள்.

புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம்- தடையை மீறி கடற்கரைக்கு செல்ல முயன்றவர்கள் மீது போலீசார் தடியடி

Published On 2022-01-01 11:16 IST   |   Update On 2022-01-01 11:16:00 IST
புதுவை ஆம்பூர், செஞ்சி சாலையில் இருந்து அந்த பகுதியில் வசிப்பவர்கள் யாரும் கடற்கரை பகுதிக்கு வந்து விடாத வகையில் தடுப்பு கட்டைகள் அமைத்து சீல் வைக்கப்பட்டது.
புதுச்சேரி:

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் படி பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு இருந்தது. நேற்று இரவு 10 மணி முதல் அதிகாலை 1 மணி வரை மதுபானங்கள் விற்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நேற்று இரவு வந்த அனைவரையும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் காண்பித்த பிறகே போலீசார் அனுமதித்தனர். மேலும் முக கவசமும் கண்டிப்பாக அணிய வலியுறுத்தினார்கள்.

நேற்று மாலையில் பெய்த மழையால் கடற்கரை சாலையில் கூட்டம் குறைவாகவே இருந்தது. அதன் பிறகு மழை விட்டதால் இரவில் படிப்படியாக கூட்டம் அதிகரித்தது.

இரவு 10 மணியளவில் ஆயிரக்கணக்கானோர் கடற்கரையில் குவிந்தனர். எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக காட்சியளித்தது.

கடற்கரை சாலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. பல வண்ண லேசர் ஒளி வீச்சுக்களால் கடற்கரை சாலை மின்னொலியாக ஜொலித்தது. கடற்கரையில் திரண்டிருந்த மக்கள் இசைக்கேற்ப நடனமாடினார்கள். ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் சரியாக 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்று உற்சாகமாக கொண்டாடினார்கள்.

புதுவை ஆம்பூர், செஞ்சி சாலையில் இருந்து அந்த பகுதியில் வசிப்பவர்கள் யாரும் கடற்கரை பகுதிக்கு வந்து விடாத வகையில் தடுப்பு கட்டைகள் அமைத்து சீல் வைக்கப்பட்டது.

அங்கு வசிப்பவர்கள் குறிப்பிட்ட சாலை வழியாக வெளியே சென்று வர சிவப்பு நிற பாஸ் போலீசாரால் வழங்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இரவு 10 மணிக்கு மேல் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வெளியே வராத வகையில் போலீசார் கெடுபிடி செய்தனர். நள்ளிரவில் அரசு ஆஸ்பத்திரி, பி.எஸ்.என்.எல். அலுவலக பகுதியில் தடுப்புகள் மீது ஏறி செல்ல முயன்றவர்களை அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

இதே போல் பல்வேறு இடங்களில் அத்துமீறியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News