உள்ளூர் செய்திகள்
மதுபானம்

புதுவையில் மதுபான விற்பனையை கண்காணிக்க 7 பறக்கும் படைகள்- கலால்துறை செயலர் தகவல்

Published On 2021-12-31 08:50 IST   |   Update On 2021-12-31 08:50:00 IST
ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து மதுபானம் விற்பதை கண்காணிக்க 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கலால்துறை செயலர் வல்லவன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி கலால்துறை செயலர் வல்லவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதவாது:-

புதுச்சேரியில் 2022-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு புத்தாண்டையொட்டி பல்வேறு இடங்களில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள மதுபான கடைகளை தவிர புதிதாக 40 இடங்களில் மதுபானம் விற்பனை செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டு, புதுச்சேரியில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி முதல் மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 1 மணி வரை அனைத்து மதுபானங்கள் விற்பனை செய்யவோ, மதுகுடிக்கவோ அனுமதியில்லை என உத்தரவிட்டுள்ளது.

எனவே புதுச்சேரியில் அனுமதி பெறப்பட்டுள்ள அனைத்து மதுக்கடைகள், பார்கள் மற்றும் சிறப்பு அனுமதி பெற்ற மதுபான கடைகள், கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இடங்களில் மதுபானங்கள் விற்பனை செய்யவோ, மதுகுடிக்கவோ கூடாது.

நீதிமன்ற உத்தரவை கண்காணிக்க கலால்துறை சார்பில் புதுச்சேரியில் 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பறக்கும் படைகள் அமைத்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கலால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா தொற்றை தடுக்க ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் மதுபான பார்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு உடல்வெப்பநிலை பரிசோதனை செய்து கிருமி நாசினி வழங்க வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். கட்டாயம் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் வைத்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும். முககவசம் அணிந்திருப்பவர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்ய வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. இந்த உத்தரவை மீறினால் கலால்துறை சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட கடைகள், பார்களுக்கு உடனடியாக சீல் வைக்கப்படும். மேலும் அதன் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கலால்துறை துணை ஆணையர் சுதாகர் உடனிருந்தார்.

Similar News