உள்ளூர் செய்திகள்
வழக்கு

பெண்ணை மானபங்கப்படுத்திய தகராறில் இரு தரப்பினர் மோதல் - 6 பேர் மீது வழக்கு பதிவு

Published On 2021-12-30 17:56 IST   |   Update On 2021-12-30 17:56:00 IST
முதலியார்பேட்டையில் பெண்ணை மானபங்கப்படுத்திய தகராறில் இரு தரப்பினர் மோதலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுவை முருங்கப்பாக்கம் பேட் அரசு குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தினேஷ். டி.வி. மெக்கானிக். இவரது மனைவி நந்தினி (வயது28).

இவர் சம்பவத்தன்று பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு பெண்ணுடன் அங்காளம்மன் நகரில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது எதிர்வீட்டை சேர்ந்த விவேக் என்ற விவேகானந்தன் (24), ஜில்பர் மற்றும் விஸ்வா ஆகியோர் மது போதையில் நந்தினியை வழி மறித்து மேலே இடிப்பது போல் வந்ததாக கூறப்படுகிறது.

இதனை நந்தினி தட்டி கேட்டு விவேக்கை தாக்கியதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த விவேக் என்ற விவேகானந்தன் ஆபாசமாக திட்டினார். மேலும் ஜில்பர் மற்றும் விஸ்வா ஆகியோர் நந்தியை மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. உடனே நந்தினியும் பக்கத்து வீட்டு பெண்ணும் அங்கிருந்து செல்ல முயன்றனர்.

ஆனாலும் விவேக் அவர்களை வழிமறித்து கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் நந்தினி தனது கணவர் தினேசிடம் முறையிட்டார். இதில் ஆத்திரமடைந்த தினேஷ் விவேக்கை ஆபாசமாக திட்டி தாக்கினார்.

இதனையறிந்த விவேக்கின் தாய் உமையாள் தினேசிடமிருந்து விவேக்கை மீட்டு வீட்டுக்கு அழைத்து வந்தார். பின்னர் அன்றிரவு தினேஷ் மற்றும் தவளக்குப்பத்தை சேர்ந்த விஷ்ணு(30), முருங்கப்பாக்கம் பேட் பகுதியை சேர்ந்த ரஞ்சித் ஆகிய 3 பேரும் விவேக்கின் வீட்டுக்குள் ஆத்துமீறி நுழைந்து விவேக்கை கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதனை விவேக்கின் சகோதரிகள் விந்தியா, அமுதா ஆகியோர் தடுக்க முயன்றனர். அவர்களையும் அந்த கும்பல் தாக்கியது.

மேலும் விந்தியாவை அந்த கும்பல் மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆத்திரம் தீராத அந்த கும்பல் விவேக்கை மேலும் கடுமையாக தாக்கி அங்கிருந்த ஆற்றின் ஓரம் வீசினர். மேலும் அமுதாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அந்த கும்பல் சென்று விட்டது. இந்த தாக்குதலில் அமுதா காயமடைந்தார். மேலும் படுகாயமடைந்த விவேக் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பின்னர் இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியே முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News