உள்ளூர் செய்திகள்
தற்கொலை

மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை

Published On 2021-12-30 17:45 IST   |   Update On 2021-12-30 17:45:00 IST
திருவாண்டார்கோவில் அருகே மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் சுமை தூக்கும் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

திருவாண்டார்கோவில் சின்னபேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சத்தியசீலன் (வயது40). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (36). பிப்டிக்கில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் குடிபழக்கமுள்ள சத்தியசீலன் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவார். அதே போல் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி விட்டு வந்து ரேவதியிடம் தகராறில் ஈடுபட்டார்.

மேலும் மது அருந்த பணம் தருமாறு மனைவியிடம் கேட்டார். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் மனவருத்தமடைந்த சத்தியசீலன் அறையின் உள்ளே சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். ரேவதியும் மகள்களை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு வீட்டில் உள்ள அன்றாட வேலைகளை பார்க்க தொடங்கினார்.

ஆனால் வெகு நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார் அங்கு சத்தியசீலன் வீட்டின் மின்விசிறியில் சேலையால் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை கண்டு ரேவதி அதிர்ச்சியில் சத்தம் போட்டார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தூக்கில் இருந்து சத்தியசீலனை மீட்டனர்.

இதுகுறித்து ரேவதி திருபுவனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Similar News