உள்ளூர் செய்திகள்
புதுச்சேரி மீனவர் தற்கொலை

வம்பாகீரப்பாளையத்தில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2021-12-25 14:47 IST   |   Update On 2021-12-25 14:47:00 IST
வம்பாகீரப்பாளையத்தில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுவை வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுந்தரம் (வயது58). இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், சிரஞ்சீவி என்ற மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

பாலசுந்தரமும், அவரது மகன் சிரஞ்சீவியும் மீன்பிடி தொழில் வருகின்றனர். இவர்கள் வசித்த வீடு சேதமடைந்து இருந்ததால் கடந்த 6 மாதமாக அதே பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.

இதற்கிடையே பாலசுந்தரத்துக்கு மஞ்சள் காமாலை, நீரழிவு நோய் மற்றும் கல்லீரல் பாதிப்பு இருந்து வந்தது. இதற்காக அவர் மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார். ஆனாலும் நோய் குணமடையாததால் அவ்வப்போது பாலசுந்தரம் வலியால் துடிப்பார்.

இந்த நிலையில் நேற்று காலை பாலசுந்தரம் மீன் பிடி தொழிலுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். அப்போது தனக்கு வயிற்று வலி அதிகமாக இருப்பதாக மனைவியிடம் பாலசுந்தரம் கூறினார்.

இதையடுத்து விஜயலட்சுமி மருந்து, மாத்திரைகளை கணவருக்கு கொடுத்துவிட்டு வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பாலசுந்தரம் வீட்டை விட்டு வெளியே சென்றார். மதியம் சாப்பாட்டுக்கு கணவரை விஜயலட்சுமி பழைய வீட்டுக்கு சென்று தேடிய போது அங்கு கணவர் மின்விசிறி கொக்கியில் நைலான் கயிற்றால் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News