உள்ளூர் செய்திகள்
ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி வெளிநாடு செல்வதை தடுக்க அதிரடி முடிவு எடுத்த போலீசார்

Published On 2021-12-23 11:12 IST   |   Update On 2021-12-23 11:46:00 IST
கடந்த 7 நாட்களாக ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.
விருதுநகர்:

ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் கூறப்பட்டது.

இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கக்கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனுவை கடந்த 17-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதையடுத்து ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார். அவரை பிடிக்க முதலில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

ஆனால் ராஜேந்திர பாலாஜி எங்கு இருக்கிறார்? என்பது பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் கூடுதலாக மேலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மொத்தம் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அவர் எங்கு இருக்கிறார் என்பது கண்டறிய அவரது உறவினர்கள் மற்றும் நெருங்கிய தொடர்பில் இருந்த கட்சி நிர்வாகிகள் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் பலர் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தனர். தனிப்படை போலீசார் விருதுநகர், மதுரை, கோவை, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அவர் வேறு மாநிலங்களுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று கருதப்பட்டது.

அதன் அடிப்படையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தனிப்படை போலீசார் விரைந்தனர். அங்கு அவர்கள் முகாமிட்டு தேடி வருகின்றனர். ஆனால் ராஜேந்திர பாலாஜி எங்கு இருக்கிறார் என்பதை கண்டறிய முடியவில்லை.

இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விடாமல் இருப்பதற்காக விமான நிலையங்களுக்கு “லுக்-அவுட்” நோட்டீசு வழங்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

ராஜேந்திர பாலாஜி வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க விமான நிலையங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களிலும் பக்கத்து மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களிலும் போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.

இதன்மூலம் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த 7 நாட்களாக அவரை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.

Similar News