உள்ளூர் செய்திகள்
யோகா

ஜனவரி 4 முதல் 7-ந் தேதி வரை சர்வதேச யோகா திருவிழா

Published On 2021-12-21 08:25 IST   |   Update On 2021-12-21 08:25:00 IST
புதுவையில் சர்வதேச யோகா திருவிழா ஜனவரி மாதம் 4-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை நடக்கிறது.
புதுச்சேரி:

புதுவை சுற்றுலாத்துறை இயக்குனர் பிரியதர்ஷிணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆண்டுதோறும் புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறையில் நடைபெறும் சர்வதேச யோகா திருவிழா வருகிற ஜனவரி மாதம் 4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை புதுச்சேரியில் நடைபெற உள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து பங்கேற்பவர்களை வரவேற்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

பங்கேற்பாளர்கள் தங்கள் பங்கேற்பை பதிவு செய்ய இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. https://pondytourism.py.gov.in/yoga என்ற இணையதளத்தில் பங்கேற்பாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம். யோகா திருவிழாவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

காலை இறைவழிபாட்டு பாடல்கள், தியானப்பயிற்சி, இலவச யோகா பயிற்சிகள், யோகா தொடர்பான கருத்தரங்கம், ஆய்வறிக்கை சமர்ப்பித்தல், யோகாசன செயல்விளக்கம், பல்வேறு வயதினருக்கான யோகாசன போட்டிகள், சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, யோக மற்றும் இயற்கை சிகிச்சைகள் அடங்கிய நல்வாழ்வு கண்காட்சி, இயற்கை உணவு அங்காடிகள், யோகா புத்தகங்கள் விற்பனை ஆகியவை நடைபெற உள்ளன.

4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை மாலை நேரங்களில் கலைநிகழ்ச்சிகள், யோகா வல்லுனர்களின் சிறப்பான சொற்பொழிவுகள் நடைபெற உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக புதுவையில் கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச யோகா திருவிழா நடத்தப்படாமல் இருந்தது. ஆனால் தொற்று பரவல் குறைந்துள்ளதால் இந்த ஆண்டு மீண்டும் யோகா திருவிழாவினை நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது.

Similar News